×

அகில இந்திய அளவிலான இறகுபந்து போட்டியில் வெற்றி

ஈரோடு, டிச. 1:  அகில இந்திய அளவில் நடந்த இறகுபந்து போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஈரோடு இறகுபந்து வீரர் செந்தில்வேலனை கலெக்டர் கதிரவன் பாராட்டினார். ஈரோடு மரப்பாலம் முத்துகுமாரசாமி வீதியில் நீல்கிரிஸ் இறகுபந்து அகாடமி செயல்பட்டு வருகிறது. இந்த அகாடமியின் பயிற்சியாளராக செந்தில்வேலன் உள்ளார். மூத்தோர் சர்வதேச இறகுபந்து வீரரான செந்தில்வேலன் சமீபத்தில் பெங்களூரில் நடந்த அகில இந்திய அளவிலான மூத்தோர் தரவரிசை இறகுபந்து போட்டியில் தமிழக அணியின் சார்பில் கலந்து கொண்டார். இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் செந்தில்வேலன் மற்றும் இவருடன் இணை வீராங்கனை ஆகியோர் சிறப்பாக விளையாடி முதல் பரிசினை பெற்றனர். இதேபோல சர்வதேச அளவில் கடந்த மாதம் போலந்து நாட்டில் நடந்த உலக இறகுபந்து சாம்பியன் கோப்பை போட்டியில் 40 வயதிற்குட்பட்டோர் கலப்பு இரட்டையர் பிரிவில் கலந்து கொண்டார்.

 இந்திய அணியின் சார்பில் உலக இறகுபந்து சாம்பியன் போட்டியில் இந்திய அணியின் சார்பில் இவர் இரண்டாது முறையாக கலந்து கொண்டார். இறகுபந்தில் தேசிய போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசினை பெற்று ஈரோடு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இறகுபந்து வீரர் செந்தில்வேலன் கலெக்டர் கதிரவனை சந்தித்து சான்றிதழ்கள் மற்றும் பரிசுகோப்பையை காண்பித்து வாழ்த்து பெற்றார். சிறப்பாக விளையாடி ஈரோடு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இறகுபந்து வீரர் செந்தில்வேலனை கலெக்டர் கதிரவன் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட இறகுபந்து கழக தலைவர் ராஜா (எ) செல்லையன், செயலாளர் சுரேந்திரன், பொருளாளர் எம்.வி.சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Tournament ,All-India Volleyball ,
× RELATED அல்போன்சா கல்லூரியில் தென்தமிழக அளவிலான கைப்பந்து போட்டி