திருவொற்றியூர்: மாதவரம் பால் பண்ணையில் தாலுகா அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு மாதவரம், மணலி, செங்குன்றம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் பொது மருத்துவம், குழந்தைகள் நலம், மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு, கடந்த ஜனவரி மாதம் 2 சிறுநீரக சுத்திகரிப்பு மெஷின் (டயாலிசிஸ்) பொருத்தப்பட்டது. இதன்மூலம் ஏராளமான நோயாளிகள் பயன் பெறுகின்றனர். இருப்பினும், அதிக அளவிலான நோயாளிகள் டயாலிசிஸ் செய்ய காத்திருப்பதால் கூடுதலாக டயாலிசிஸ் இயந்திரம் அமைக்க வேண்டும் என்று நோயாளிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை சார்பில் கூடுதலாக 2 டயாலிசிஸ் மெஷின் பொருத்தப்பட்டது.
இதன் துவக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தலைமை மருத்துவர் சகுந்தலா, ஜஸ்டினா, செவிலியர் கண்காணிப்பு அலுவலர் ஓமனா மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து அரசு மருத்துவர்கள் கூறுகையில், ‘‘முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அடையாள அட்டை உள்ள அனைவரும் இங்கு டயாலிசிஸ் பரிசோதனை செய்து கொள்ளலாம். முதல்முறையாக வருபவர்கள் முதலமைச்சரின் காப்பீட்டு அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவர்களை கொண்டு வந்து மருத்துவமனையில் பதிவு செய்ய வேண்டும்,’’ என்றனர்.