பரமத்திவேலூர், நவ.29: பரமத்திவேலூர் பேரூராட்சியில், அரசு பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பரமத்திவேலூர் பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாரந்தோறும் வியாழக்கிழமையை டெங்கு ஒழிப்பு தினமாக கடைபிடித்து வருகின்றனர். நேற்று, பரமத்திவேலூர் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும், ஊழியர்கள் கொசு புகை மருந்து அடித்து, தூய்மை பணிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து குப்புச்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளை கொண்டு டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் சுப்ரமணியன் பேரணியை தொடங்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தின் போது, டெங்கு ஒழிப்பு மற்றும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்திச் சென்றனர். தொடர்ந்து பள்ளியில் மாணவ, மாணவிகள் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், சுகாதார மேற்பார்வையாளர் மணிவண்ணன், சுகாதார ஆய்வாளர் அப்துல், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.