விருத்தாசலம், நவ. 29: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள தே.பவழங்குடி கிராமத்தில் தெரு நாய்களும், வெறி நாய்களும் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இவைகள் அப்பகுதியில் செல்லும் சிறு பிள்ளைகள், பள்ளி மாணவ, மாணவிகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் துரத்தித் துரத்தி கடிக்கின்றன. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட முடியாமல் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆறுமுகம், தர்மலிங்கம், இளம்பிறை, கார்த்திகேயன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோரை நாய்கள் கடித்துள்ளது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அப்பகுதியினர் கூறும்போது, தெருவில் சுற்றி திரியும் நாய்கள் வெறி பிடித்து பொதுமக்களைக் கடித்து வருகின்றன.
இது குறித்து பவழங்குடி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் ஒவ்வொரு நாளும் நாய்களுக்கு பயந்து நாங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கிறோம். மேலும் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்களையும் அந்த வெறி நாய்கள் கடித்து அவைகளுக்கும் அந்த நோய் ஏற்பட்டு அதன் குணம் மாறுவதால் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்றனர். எனவே, எங்கள் பகுதி மக்களின் பாதுகாப்பு நலன் கருதி வெறி நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றனர்.