×

வடமாநிலங்களில் தொடர் மழை எதிரொலி பெரிய வெங்காயம் தட்டுப்பாட்டால் பொது மக்கள் அவதி

திருப்பூர்,நவ.29:பெரிய வெங்காயம் உற்பத்தி மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் பெய்த தொடர் மழையால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, இருப்பு வெங்காயம் அழுகியதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  திருப்பூர். கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, சென்னை உட்பட பல்வேறு தொழில் நகரங்களிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஆடைகள், இயந்தரங்கள், இறைச்சி வகைகள், இரும்பு தளவாடப்பொருட்கள், மின்சாதனப்பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்கள் மும்பை துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்காக ஆயிரக்கணக்கான பார்சல் லாரிகள் இயங்கி வருகிறது.  தமிழகத்திற்கு திரும்பி வரும் வழியில் உள்ள மும்பை, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள மொத்த வெங்காய சந்தைகளிலிருந்து பெரிய வெங்காய மூட்டை ஏற்றி தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள சந்தைகளில்  விற்பனை செய்யப்படுவது வழக்கம். கடந்த சில மாதங்களாக மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் தொடர் மழையால் அறுவடை முற்றிலும் தடைபட்டுள்ளது. மேலும், இருப்பு வைத்துள்ள வெங்காய மூட்டைகள் மழையில் நனைந்து அழுகியுள்ளது. தொடர் மழையால் தமிழகத்தில் இருந்து சரக்கு வாகனங்கள் வடமாநிலங்களுக்கு அதிகளவு செல்லாததால்  பெரிய வெங்காய மூட்டைகளை ஏற்றிவருவது தடைபட்டுள்ளது. பருவ மழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பெரும்பாலான வெங்காய பயிர்கள் அழுகி அழிந்து விட்டன. இதனால் இந்த மாநிலங்களில் 26 சதவீத வெங்காய உற்பத்தி சரிவு ஏற்பட்டுள்ளது.எனவேதான் நாடு முழுவதும் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தட்டுப்பாட்டை போக்க 1 லட்சத்து 20 ஆயிரம் டன் வெங்காயத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்து இருந்தது. இதன் முதல் கட்டமாக எகிப்து நாட்டில் இருந்து 6 ஆயிரத்து 90 டன் வெங்காயம்  கப்பலில் இந்தியா வர உள்ளது. டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் மும்பை துறைமுகத்தை அந்த கப்பல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடனடியாக அது விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு கொண்டு வரப்படும் வெங்காயம் மும்பை மாநில அரசுக்கு ரூ.52-ல் இருந்து ரூ. 55 வரை விலை வைத்து வழங்கப்படும். டெல்லிக்கு ரூ.60 என்ற விலையில் சப்ளை செய்யப்படும். இது குறித்து மொத்த வெங்காய வியாபாரிகள் கூறியதாவது.
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களிலிருந்து வடமாநிலங்களான   மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பீகார், உத்தரபிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு ஜவுளி ரகங்களை  லாரிகளில் ஏற்றி செல்கின்றனர். ஒரு சில பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் மும்பை துறைமுகம் மூலம் கப்பலில் சரக்குகளை ஏற்றுமதி செய்கின்றனர். இதற்காக செல்லும் லாரிகளில் மகாராஷ்டிரா, கர்நாடகா உட்படபல்வேறு மாநிலங்களிலிருந்து  பெரிய வெங்காயத்தை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சந்தைகளிலும் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்து குறைந்த விலைக்கு விற்பது வழக்கம். வெங்காயத்திற்காக தனியாக லாரி பிடித்து அனுப்ப முடியாது. போக்கு லாரிகளிலிருந்து வெங்காயம் கொண்டு வந்தால் மட்டுமே குறைவான விலைக்கு விற்க முடியும்.  திருப்பூர் சந்தைக்கு 10 சக்கரம் கொண்ட லாரியில் 30 டன்னும்,12 சக்கரம் உள்ள லாரியில் 40 டன் அளவுள்ள வெங்காய மூட்டைகள்  கொண்டு வரப்படுகிறது. எகிப்து வெங்காயம் டிசம்பர் முதல் வாரத்தில் விற்பனைக்கு வருகிறது.இன்னும் ஒரு சில நாட்களில்  வெங்காயத்தின் விலை குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : public ,Northern Territory ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...