×

நெற்பயிரை தாக்கும் ஆனை கொம்பன் புழுக்களை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம்

போச்சம்பள்ளி, நவ.28: நெற்பயிரை தாக்கும் ஆனை கொம்பன் புழுக்களை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து வேளாண் அதிகாரி ஆலோசனை தெரிவித்துள்ளார்.மத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்தூர் வட்டாரத்தில், தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி, விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது நெற்பயிரில் ஆனை கொம்பன் புழுக்கள் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. ஆனை கொம்பன் புழுக்கள் வளரும் தூர்களை தாக்குகிறது. புழுக்கள் தூர்களை துளைத்து உட்சென்று வளரும் பகுதியை உண்கிறது. இதனால் தாக்கப்பட்ட தூர்களில், நெற்கதிர்கள் வளர்ச்சி குன்றி காணப்படும். குருத்து பகுதி வெங்காய இலைகள் போல் காணப்படும். இந்த பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, முன் கூட்டியே நிலத்தை உழவு செய்ய வேண்டும். அறுவடைக்கு பின் நிலத்தை ஆழமாக உழவு செய்ய வேண்டும். தழைச்சத்து உரங்களை பரிந்துரை செய்யப்பட்ட அளவு மட்டும் பயன்படுத்த வேண்டும். மேலும், புறஊதா விளக்கு பொறி வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். மேலும், குளோரிபைரிபாஸ் 1 ஹெக்டேருக்கு 1,250 மில்லி பிப்ரேனில் 1000-1500 மில்லி குளோரான் ரேனிலிப்ரோல் 100 மில்லி என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED துப்புரவு ஊழியரை தாக்கிய வாலிபர் கைது