×

இடைகால் துரைச்சாமிபுரம் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பாதிப்பு

கடையநல்லூர், நவ.28: இடைகால் துரைச்சாமிபுரத்தில் ரயில்வே சுரங்கப்
பாதையில் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடையநல்லூரை அடுத்த இடைகால் துரைச்சாமிபுரத்தில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆமை வேகத்தில் நடந்து வரும் ரயில்வே சுரங்கப்பாதை பணிகளால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. எனவே ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடையநல்லூரை அடுத்த இடைகால் துரைச்சாமிபுரத்திலிருந்து ஊர்மேலழகியான் கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலையில் ஆளில்லா ரயில்வே கேட் இருந்தது. இந்த வழியை கடந்து தான் இப்பகுதி பொதுமக்களுக்களுக்கு ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இதனால் விவசாய பணிகளுக்கு செல்லக்கூடிய விவசாயிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். மேலும் இப்பகுதி மக்களுக்கு மயானக்கூடத்திற்கும் இந்த சாலையை கடந்து தான் செல்ல வேண்டும். இந்நிலையில் இந்த ஆளில்லா ரயில்வே கேட் அகற்றப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பாலத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிநடந்து வருகிறது. சுரங்கப்பாதை பணிநிறைவடைந்தாலும் பக்கவாட்டு தடுப்புசுவர் பணி அறைகுறையாக நிற்கிறது. மழைக்காலங்களில் இந்த சுரங்கப்பாதையில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. துரைச்சாமிபுரத்தில் யாராவது மரணமடைந்தால் கூட இந்த வழியே செல்ல முடியாமல் மாற்றாக அருகில் உள்ள இடைகால் வழியாக சுமார் 4 கி.மீ. தூரம் சுற்றியே வர வேண்டிய சூழல் உள்ளது. எனவே இந்த சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Motorists ,rain water accumulation ,railway tunnel ,Idukkal Duraichampuram ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...