பாடாலூர், நவ 28: பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகம் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின்கீழ் மகிளா சக்தி கேந்திரா திட்டம் மூலம் பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை அதிகரிப்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடந்தது. பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நல்லுசாமி தலைமை வகித்தார். பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியில் மாணவ, மாணவிகள் பாலின விகிதத்தை அதிகரிப்பது தொடர்பான கோஷங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மாவட்ட இலவச சட்ட உதவி மைய வழக்கறிஞர் வெள்ளைச்சாமி, மாவட்ட சமூகநல அலுவலக மகிளா சக்தி கேந்திரா திட்ட மகளிர் நல அலுவலர் ஜெயந்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுகன்யா, பாதுகாப்பு அலுவலர் முத்து செல்வி, ஒருங்கிணைந்த சேவை மைய முதுநிலை ஆலோசகர் பிரேமா, வழக்கு அலுவலர் மேகலா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.