×

உள்ளாட்சி தேர்தலில ஆதரவு பெற வளர்ச்சி திட்ட பணிகளில் பிரமுகர்கள் ஆர்வம்

திருவள்ளூர், நவ. 28: உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக, கிராமங்களில் நிலுவையிலுள்ள குடிநீர் மற்றும் சாலை மேம்பாட்டு பணிகளை முடிக்க ஆளும்கட்சி பிரமுர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் ஒன்றிய பொது நிதி, நிதிக்குழு மானியம் உட்பட பல்வேறு நிதி திட்டங்களின் கீழ், வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிதித்திட்டங்களில், குடிநீர் வினியோகம் மற்றும் சுகாதார மேம்பாட்டுப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.ஆனால், ஒப்பந்ததாரர்களின் அலட்சியம் மற்றும் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பு இல்லாததால், பெரும்பாலான பணிகள் குறித்த நேரத்தில் முடிக்கப்படுவதில்லை. இதனால், மக்களிடையே அதிருப்தி ஏற்படுகிறது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தேர்தல் ஆணையத்தால் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி, ஒன்றியக்குழு, மாவட்ட குழு உறுப்பினர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதையடுத்து, தங்களுக்கான வார்டுகளை தேர்வு செய்துள்ள ஆளுங்கட்சி பிரமுகர்கள், மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண திடீர் அக்கறை காட்டத் துவங்கியுள்ளனர்.அதே வேளையில், நிலுவையிலுள்ள குடிநீர் திட்ட பணிகளை துரிதப்படுத்தி, அதிருப்தியை குறைக்க அதிகாரிகளுக்கு ஆளுங்கட்சியினர் மறைமுக உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, நிலுவையிலுள்ள ஒன்றிய பொது நிதி திட்ட பணிகள் திடீர் சுறுசுறுப்பு அடைந்துள்ளன.குறிப்பாக, புதிதாக உருவாக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குதல், சின்டெக்ஸ் தொட்டி அமைத்து தண்ணீர் வினியோகம், கிராம இணைப்பு ரோடுகள் ஆகிய பணிகளை, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இவ்வாறு, தங்கள் பிரச்னைக்கு அதிக ஆர்வம் காட்டும் கட்சியினர் மற்றும் திட்டப் பணிகளில் திடீர் தீவிரத்தால் மக்கள் திக்குமுக்காடி வருகின்றனர். இருப்பினும், தங்கள் பகுதிக்கான கோரிக்கைகளை பதிவு செய்ய கிராம மக்கள் காத்திருக்கின்றனர்.


Tags : dignitaries ,election ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...