வலங்கைமான், நவ.28: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த நல்லூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பள்ளியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆங்கிலவழிக்கல்வியான எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளை பார்வையிட்டார். பின்னர் முதல்வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களின் ஆங்கில கற்றல் திறனை ஆய்வு செய்தார். கரும்பலகையில் எழுதி மாணவர்களை வாசிக்க செய்தார்.
பின்னர் ஆசிரியர்களிடம் ஜாலிபோனிக்ஸ் ஆங்கிலம் கற்பித்தல் முறைகளை பற்றி கேட்டறிந்தார்.பின்னர் பள்ளி வளாகம், கழிவறைகள் தூய்மையாக பராமரிக்கப்படுகின்றதா எனவும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளதா என்றும், மாணவர்களுக்கு வழங்கப்படும் பள்ளி சத்துணவு தரத்தை ஆய்வு செய்தார். முன்னதாக அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம், நியாயவிலைக்கடை ஆகியவற்றை ஆய்வு செய்தார். ஆய்வின்போது வட்டாரகல்வி அலுவலர் ஜெயலட்சுமி, பள்ளி தலைமையாசிரியர் கலா மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.