×

கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையம் அருகில் பறிமுதல் வாகனங்களால் விஷப்பூச்சிகள் தொல்லை: பொதுமக்கள் கடும் அவதி

அம்பத்தூர்: அம்பத்தூர் கருக்கு குடியிருப்பு பகுதியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நிலையம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்களால் பாம்பு உள்பட விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.     அம்பத்தூர் அடுத்த கருக்கு பகுதியில் சென்னை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் பாதுகாப்பு துறை போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் போலீசார் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உணவு பொருளை கடத்தி விற்பனை செய்யும் கும்பலை பிடித்து அவர்களிடம் இருந்து வாகனங்கள்,  உணவு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இவ்வாறு கடந்த சில ஆண்டுகளாக அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட 100க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர்.     இவை போலீஸ் நிலையம் அருகில் உள்ள காலி இடத்தில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த சில ஆண்டுகளாக ஒரே இடத்தில் உள்ளதால் சுற்றிலும் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இங்கு ஏராளமான பாம்புகள், விஷப்பூச்சிகள் உற்பத்தியாகி குடியிருப்பு பகுதிக்குள் உலவி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், அவை போலீஸ் நிலையத்திற்குள்ளும் அடிக்கடி புகுந்து விடுகிறது. இதனால் போலீசாரும் அச்சத்துடன் தான் பணியாற்றி வருகின்றனர். மேலும் இங்கு கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.

 இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் அம்பத்தூர் மண்டல அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர்.    மேலும் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்களை, அதே பகுதியில் சாலையிலும் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் சாலையை பயன்படுத்த முடியவில்லை. மேலும் அடிக்கடி அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு சென்று வருகின்றனர். மேலும் தெருவில் உள்ள குழந்தைகள் விளையாட முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நிலையத்தை சுற்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்களை ஏலம் விட சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது இவற்றை வேறு இடத்தில் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Trafficking Prevention Unit Police Station ,
× RELATED கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையம்...