×

கொலை செய்துவிட்டு 4 மாதமாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த கொலை குற்றவாளி அதிரடி கைது

பரமக்குடி, நவ.27: கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி நான்கு மாதங்களுக்கு பின்பு நேற்று போலீஸ் வலையில் சிக்கினார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பாலன் நகரை சேர்ந்த முனியாண்டி என்பவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இவரை கொலை செய்த சேக் என்ற ஜெயக்குமார் தலைமறைவாகிவிட்டார். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக உள்ள சேக் என்ற ஜெயக்குமாரை பல இடங்களில் போலீசார் தேடி வந்தனர். இவன் மீது  வழிப்பறி, திருட்டு, கொலை உட்பட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளது. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் தேடியும் இவனை போலீசார் பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் பரமக்குடி டவுன் காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரியும் ஆனந்தகுமார் நேற்று உழவர்சந்தை பகுதியில் டூவிலரை பழுதுபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சேக் என்ற ஜெயக்குமார் சென்றுள்ளார். அவரை எழுத்தர் ஆனந்தகுமார் பின்தொடர்ந்து சென்றார். அப்போது சேக் அப்பகுதியில் கொய்யாபழம் விற்றுக்கொண்டிருந்த வியாபாரியை மிரட்டி பணம் பறிக்க முயன்றார். அப்போது எழுத்தர் ஆனந்தகுமார் சுற்றி வளைத்து ஜெயக்குமாரை பிடிக்க முயன்றார். ஆனால் அவன் தப்பி ஓடவே, அவரை சினிமா பாணியில் விரட்டிச் சென்று ஆனந்தகுமார் பிடித்தார். பின்னர் அவனை ஆட்டோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சேக் (எ) ஜெயக்குமார் தாக்கியதில் போலீஸ் எழுத்தர் ஆனந்தகுமாருக்கும் காயம் ஏற்பட்டது. தனிநபராக செயல்பட்டு கொலை குற்றவாளியை பிடித்த ஆனந்தகுமாரை ராமநாதபுரம் எஸ்.பி., வருண்குமார் பாராட்டினார்.

Tags : Dimicky ,
× RELATED அதிகாலை நேரத்தில் அதிக ஆட்களை...