×

குறிச்சி, செங்குளத்திலிருந்து 2 மாதமாக உபரி நீர் வெளியேற்றம் நீடிப்பு

கோவை, நவ.27:  கோவை குனியமுத்தூர் செங்குளம், குறிச்சி குளம் நிரம்பி இரு மாதமாக உபரி நீர் வெளியேறி கொண்டிருக்கிறது.மழை பெய்து நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்த நிலையில் நொய்யல் நீராதாரத்தில் உள்ள 24 குளங்கள் நிரம்பியது. குனியமுத்தூர் செங்குளம் நிரம்பி உபரி நீர் கடந்த 2 மாதமாக வெளியேறி வருகிறது. இந்த தண்ணீர் வாய்க்கால் வழியாக குறிச்சி குளத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. குறிச்சிகுளமும் கடந்த 2 மாதமாக நிரம்பி வழிகிறது. உபரி நீர், பாலக்காடு மெயின் ரோடு கீழ் பாலம், காயிதே மில்லத் காலனி வடிகால் வாய்க்கால் வழியாக நொய்யல் ஆற்றில் பாய்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் அவ்வப்போது மழை பெய்வதால் நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 100 முதல் 200 கன அடி நீர் பாய்கிறது. மேற்கு பகுதி குளங்கள் நிரம்பிய நிலையில், நகரின் மைய பகுதியில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம், உக்கடம் பெரியகுளம், செல்வசிந்தாமணி மற்றும் வாலாங்குளத்திற்கு நீர் செல்ல விடாமல் தடை ஏற்படுத்தியுள்ளது. இந்த 3 குளங்கள் தவிர நொய்யல்் ஆற்றின் அனைத்து குளங்களும் நிரம்பி விட்டது குறிப்பிடத்தக்கது.பொதுப்பணித்துறையினர் கூறுகையில், ‘‘குளங்களுக்கு செல்லும் நீரை தடுத்து ஷட்டர் அடைக்கப்படமாட்டாது. குளங்கள் நிரம்பினாலும் நீர் தொடர்ந்து விடப்படும். நிரம்பி நீர் உபரியாக அடுத்த குளங்களுக்கு சென்றுவிடும். சில இடங்களில் நொய்யல் நீர் தொடர்ந்து பாய்கிறது. குளங்கள் நிரம்பியதால் மாவட்ட அளவில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விட்டது’’ என்றனர்.


Tags : kurichi ,
× RELATED கல்லிடைக்குறிச்சியில் கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது