திண்டுக்கல், நவ. 27: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மாலை வருகை தந்த உழவர் உழைப்பாளர் கட்சி நிறுவனத் தலைவர் செல்லமுத்து விவசாயிகளுடன் சென்று கலெக்டர் விஜயலட்சுமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில், ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தயம், பழநி ஆகிய பகுதிகளில் கண்வலி விதை அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. இதற்கு போதிய விலை கிடைக்கவில்லை என்றும் உரிய விலை கிடைக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘திண்டுக்கல் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் கண்வலி விதை பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோ கண்வலி விதை ரூ.3,500க்கு விற்பனையானது இந்த ஆண்டு ரூ.1500 க்கு தான் விற்பனை ஆகிறது ஆனால் உற்பத்தி செலவு கிலோவுக்கு ரூ. 2 ஆயிரம் ஆகிறது. எனவே கண்வலி விதை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். நிலக்கடலை, சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது. அதேபோல் கண்வலிக்கும் கடன் வழங்க வேண்டும் அப்போதுதான் விவசாயிகள் விலை வீழ்ச்சியில் இருந்து மீண்டு வருவார்கள்.
இதை திண்டுக்கல் கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளோம். பின்னர் தமிழக முதலமைச்சரையும் சந்தித்து வலியுறுத்த இருக்கிறோம். மொத்தமாக 6 கம்பெனிகள் தான் கண்வலி விதைகளை வாங்குகிறார்கள். அவர்கள் நினைத்தால் விலையை உயர்த்தலாம், குறைக்கலாம் எனவே அரசு அவர்களை தொடர்பு கொண்டு உயர்வுக்கு வழிவகுக்க வேண்டும். இதற்கு அரசு மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். விலை உயர்வுக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகளை ஒன்று திரட்டி விதையை வாங்கும் கம்பெனிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்’ என்றார்.