×

பொதுப்பணி துறையின் பல ஆண்டு மெத்தனம் தூர்வாரி சீரமைக்காத மதுராந்தகம் ஏரி: விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டு

மதுராந்தகம், நவ. 27: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரியை, பொதுப்பணி துறையின் மெத்தன போக்கால், சுமார் 50 ஆண்டுகளாக தூர்வாரி சீரமைக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் முக்கியமானதாக மதுராந்தகம் ஏரி உள்ளது. இந்த ஏரி, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மதுராந்தகம் புறவழிச்சாலை அருகே அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரி நிரம்பி ரம்யமாக காணப்படும். இதனால், அவ்வழியாக பயணம் செய்யும் பொது மக்கள், மதுராந்தகம் ஏரியை ரசித்து கொண்டு செல்வார்கள். சுமார் 2,400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி 23.3 அடி ஆழம் கொண்டது. மழை காலங்களில் தண்ணீர் நிரம்பும்போது, இங்குள்ள 5 மதகுகள் வழியாக திறந்து விடப்படும் நீரின் மூலம் பல கிராமங்கள் விவசாய பாசனம் பெறுகின்றன.

குறிப்பாக மதுராந்தகம், காந்தி நகர், அருங்குணம், காவாதுர், தேவாதூர், முள்ளி, வளர்பிறை, முன்னூத்திகுப்பம் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் 3 போகம் பாசனம் பெறும். இதுமட்டுமின்றி இந்த ஏரியில் இருந்து உயர்மட்ட கால்வாய்கள் வழியாக திறந்து விடப்படும் நீரின் மூலம், பல சிறிய ஏரிகளுக்கு நீர்வரத்து சென்று, அதன் மூலம் அந்த ஏரிகள் நிரம்பி அந்த பகுதிகளில் உள்ள பாசன நிலங்கள் பயன்பெறும். இவ்வாறு அருங்குணம், புளியரனங்கோட்டை, லத்தூர், பவுஞ்சூர், மடையம்பாக்கம் உள்பட பல ஏரிகள் உயர்மட்ட கால்வாய்கள் வழியாக நிரம்புகின்றன.

இதுபோல் மதுராந்தகம் ஏரியின் மூலம் பாசனம் பெறும் விவசாய நிலங்களில் 3 போகம் விவசாயம் நடைபெறும். அதில் நெல், வேர்க்கடலை, வாழை, கரும்பு, கேழ்வரகு, வெற்றிலை ஆகியவை இப்பகுதிகளில் பிரதானமாக பயிரிடப்பட்டு வந்தது. ஆனால் மதுராந்தகம் ஏரியில, தற்போதைய சூழலில் ஆண்டுக்கு ஒரு போகம் விவசாயம் செய்வதற்கே போதிய தண்ணீர் இல்லை. இதனால், பல ஆண்டு காலமாக பயனடைந்த விவசாயிகள் தற்போது மிகுந்த கவலையடைந்துள்ளனர். தற்போது இந்த ஏரியில், பெருமளவில் தூர்ந்து போய் அதன் நீர் கொள்ளளவை இழந்துள்ளது. இந்த ஏரியின் முழு ஆழம் 23.3 அடி என பொதுப்பணித் துறை ஆவணங்களிலும், ஏரியில் நடப்பட்டுள்ள நீரினை அளக்கும் அளவுகோலிலும் காணப்படுகிறது. ஆனால், தற்போது இந்த ஏரியின் முழு ஆழம் சுமார் 12 அடி மட்டுமே இருக்கிறது. மீதமுள்ள 11 அடி ஆழத்திற்கு ஏரியில் மண் தூர்ந்து விட்டது.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் இந்த ஏரி தூர்வார பட்டதாக இப்பகுதியை சேர்ந்த ஒரு சில பெரியவர்கள் கூறுகின்றனர். அதன்பிறகு ஏரியை தூர்வாரி சீரமைக்க, பொதுப்பணி துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தற்போது இந்த பெரிய ஏரியில், பெரிய அளவில் தூர்ந்துள்ளது என வேதனையுடன் கூறுகின்றனர். மேலும், ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், ஏரியின் நீர்பரப்பு பகுதியில் பெருமளவு ஆக்கிரமிப்பு செய்தும், ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் வழியாக நீர் வர விடாமல் சமன் செய்து விட்டனர். இதனால், ஏரிக்கு நீர்வரத்து மிகவும் குறைந்து விட்டதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டும் போது கருங்குழி, மலைப்பாளையம், பசும்பூர், வேடந்தாங்கல், மோச்சேரி, புதூர், மதுராந்தகம் நகரம் என பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, மக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும். ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. இந்த பகுதி விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்கள், விவசாயிகள் என பலரும் ஏரியை தூர்வார வேண்டும் என தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கை இல்லை என்றனர்.

இதுதொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, பொதுப்பணித்துறை ஆவணங்களின்படி பல ஆண்டுகளுக்கு முன், தூர்ந்து போகாத நிலையில் இருந்த இந்த ஏரியின் முழு கொள்ளளவு 694 மில்லியன் கன அடி. ஆனால், தற்போது இந்த பெருமளவு தூர்ந்து போய்விட்டதால் தற்போது ஏரியில் 250 முதல் 300 கனஅடி அளவுக்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க முடியும் என்றார். எனவே 23.3 அடி ஆழம் என அளவுகோல் நடப்பட்டு இருக்கும், ஆனால் இருக்காது என்பதுபோல காட்சிப்படுத்துவதை விட்டுவிட்டு இந்த மதுராந்தகம் ஏரியை முழுமையாக தூர்வாரி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் உதவி செய்ய அரசு முன் வர வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Tags : Public Works Department ,Maduranthankam Lake ,
× RELATED ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்