×

ஆசிரமத்தில் விட்டு சென்றது எனது சகோதரியின் குழந்தை

உளுந்தூர்பேட்டை, நவ. 27:  உளுந்தூர்பேட்டை பேரூராட்சி திருச்சி நெடுஞ்சாலை அருகில் உள்ள ஒரு ஆசிரமத்தில் கடந்த வாரம் பிறந்து 10 நாளே ஆன பெண் குழந்தையை ஒரு இளம்பெண் ஆஸ்ரமத்தில் இருந்த மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு மாயமானார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற உளுந்தூர்பேட்டை சைல்டு லைன் அமைப்பினர் அந்தக் குழந்தையை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து பின்னர் விழுப்புரத்தில் உள்ள சமூகநலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் நேற்று மாலை உளுந்தூர்பேட்டை அருகே கிளாப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முனியன் மனைவி வெண்ணிலா (28) என்ற பெண் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்து தலைமை காவலர் அஷ்டலட்சுமியிடம் அந்த குழந்தை தனது தங்கை அலமேலு என்பவருடைய குழந்தை.  அவர் நன்னாவரம் கிராமத்தில் வசித்து வந்ததாகவும் அவருக்கு ஏற்கனவே 10 வயதில் விஜயலட்சுமி என்ற பெண் உள்ளதாகவும் அலமேலு சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் அந்த பிள்ளையை தான் வளர்த்து வருவதாகவும் சம்பவத்தன்று அலமேலு பிரசவத்திற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்தபோது அங்கிருந்து குழந்தையுடன் அலமேலு மாயமானதால் அவரை தேடிவந்தோம். இந்நிலையில் ஆசிரமத்தில் விட்டு சென்ற அந்த குழந்தை அலமேலுவின் குழந்தை என்றும் மனநிலை பாதிக்கப்பட்டு காணாமல்போன அலமேலுவை தேடி வருவதாகவும் கூறினார். இதுகுறித்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.  

Tags : sister ,baby ,
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…