மன்னார்குடி, நவ. 27: அரசியலமைப்பு தினத்தையொட்டி மன்னார்குடி ரயில் நிலையத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் ரயில் நிலைய ஊழியர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.அரசியல் நிர்ணய சபை 1949ம் ஆண்டு நவம்பர் 26ம்தேதி இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு ஒப்புதல் தந்தது. சரியாக இரண்டு மாதங்கள் கழித்து 1950ம் ஆண்டு ஜனவரி மாதம் அதே 26ம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதை குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு நிர்ணய சபை ஒப்புதல் தந்த நவம்பர் 26ம் தேதியை அரசியலமைப்பு தினமாக கொண்டாட உத்தரவிட்டது. டாக்டர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இது அனுசரிக்கப் படுகிறது.1979ம்ஆண்டு முதல் தேசிய சட்ட தினமாக பார் கவுன்சில் இந்த தினத்தை அனுசரித்து வந்தது.
இந்த தினத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் தேச ஒருமைப்பாடு, சகோதரத்துவம் தொடர்பான உறுதி மொழியினை ஆண்டு தோறும் எடுத்து வருகிறார்கள்.
ரயில்வே ஊழியர்களும் இதை பின் பற்றி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று மன்னார்குடி ரயில் நிலையத்தில் இதற்கான உறுதி மொழியை நிலைய கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் பணியில் இருந்த ஊழியர்கள் உறுதி மொழியை ஏற்றனர்.