தூத்துக்குடி, நவ. 27: விளாத்திகுளம் தாலுகா ஓ.துரைசாமிபுரத்தை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த ஆழ்துளை கிணறு பழுதானதையடுத்து சுமார் ரூ.3 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த பணி முடியவில்லை. அதே நேரத்தில் அந்த பணி முடிந்ததாக கிராம பதிவேட்டில் உள்ளது. கடந்த 6 மாதங்களாக எங்கள் கிராமத்திற்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே எங்கள் பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.