அருப்புக்கோட்டை, நவ. 26: அருப்புக்கோட்டையில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
சிவன் கோயில்களில் கார்த்திகை சோமவாரங்களில் சிவனுக்கு சங்காபிஷேகம் செய்தால், நற்பலன் ஏற்படும் என்பது ஐதீகம். இதன்படி கார்த்திகை மாதங்களில் வரும் திங்கட்கிழமைகளில் சிவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. கார்த்திகை 2வது சோமவாரத்தை முன்னிட்டு, அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. இதையொட்டி 108 வலம்புரி சங்குகள் லிங்க வடிவத்தில் வைக்கப்பட்டது. பின்னர், புனித நீர் நிரப்பப்பட்டு, சங்குகளில் மாவிலைகள் மற்றும் பூக்கள் வைக்கப்பட்டது. தொடர்ந்து அச்சகர்கள் கணபதி ஹோமம் செய்து சங்குகளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வேதம் மந்திரம் ஓதி பூஜைகள் செய்தனர். பின்னர் தீபாரதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் அமுதலிங்கேஸ்வரர் அமுதவல்லியம்மன் கோயிலும் சங்காபிஷேகம் நடந்தது.