திருப்புத்தூர், நவ. 26: திருப்புத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர், யோகபைரவர் கோயிலில் நாளை நவ.27ம் தேதி சம்பக சஷ்டி உற்சவ விழா துவங்குகிறது.திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் நாளை (நவ.27) சம்பக சஷ்டி உற்சவம் நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 9 மணிக்கு யோகபைரவர் சன்னதி முன்பு கும்பங்கள் வைத்து சிவாச்சாரியார்களால் அஷ்ட பைரவர் யாகம் தொடங்கும். காலை 11.30 மணியளவில் பூர்ணாகுதியும், மதியம் 12.00 மணிக்கு யோக பைரவருக்கு பால், சந்தனம், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களாலும், யாகம் செய்யப்பட்ட புதிய நீராலும் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அர்ச்சனையும் நடைபெறும். பிற்பகல் 1 மணியளவில் சிறப்பு தீபாராதனையும் நடைபெறும். பின்னர் யோக பைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதேபோல மாலை 4.30 மணிக்கும் அஷ்ட பைரவர் யாகமும், 7.00 மணிக்கு பூர்ணாகுதியும், 7.15 மணிக்கு யோகபைரவருக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அர்ச்சனையும், 7.45 மணியளவில் தீபாராதனையும் நடைபெறும். நாளை நவ.27ம் தேதி முதல் டிச.2ம் தேதி வரை தினந்தோறும் சம்பவ சஷ்டி உற்சவம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை சம்பக சஷ்டி விழா குழுவினர் செய்து வருகின்றனர்.