திருச்செங்கோடு, நவ.26:எலச்சிபாளையம் அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவையொட்டி, கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. எலச்சிபாளையம் ஒன்றியம், குருக்கபுரம் கிளை மாரியம்மன் கோயில் அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவையொட்டி, கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் கிளை செயலாளர் தேவராஜ் தலைமை வைத்தார். மாவட்ட செயலாளர் கந்தசாமி கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் ரமேஷ், புள்ளாச்சிபட்டி கிளை செயலாளர் கந்தசாமி, ராஜூ, ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட செயலாளர் கந்தசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இந்த கூட்டத்தில், விண்ணப்பித்த அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஒன்றியம் முழுவதும், பழுதடைந்துள்ள கிராம சாலைகளை சீரமைக்க வேண்டும். ஊராட்சிகளில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற, உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.