அமபை, நவ. 26: அம்பை வட்டாரத்தில் நடைபெற்று வரும் வேளாண் பணிகளை மாநில கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் சுந்தரம் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.அம்பை வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதை பரிசோதனை பணிகளை ஆய்வு செய்த இயக்குநர் சுந்தரம், இருப்பில் உள்ள விதைகள் விநியோகம் செய்து முடிக்கும் வரை தொடர்ந்து பராமரிப்பு மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் கோவில்குளம் கிராமத்தில் 2018-19ம் ஆண்டு கூட்டுப் பண்ணையம் திட்டத்தின் கீழ் துவக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் குழுவின் நடவடிக்கைகள் குறித்து விவசாய குழு உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். மேலும் இக்குழுவிற்கு கடந்தாண்டு வழங்கப்பட்ட பண்ணை இயந்திரங்களை பார்வையிட்டார்.கோடாரங்குளத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயந்திர நடவு செய்யப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்ட அவர், விவசாயிகளிடம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் மாநில வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் உளுந்து விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினார். பின்னர் அந்த விதைகளை வயல் வரப்புகளில் ஊன்றி செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டு, வரப்புகளில் உளுந்து விதைகள் ஊன்றுவதால் கிடைக்கும் உபரி லாபம் குறித்து எடுத்து கூறினார். தொடர்ந்து அடையக்கருங்குளம் கிராமத்தில் 2019-20ம் ஆண்டு கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் கூட்டு சாகுபடி செய்யப்பட்ட நெல் நாற்றங்கால் வயல்களை பார்வையிட்டார். ஆய்வின் போது மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் பாலசுப்பிரமணியன், மாநில திட்டங்கள் வேளாண்மை துணை இயக்குநர் நல்லமுத்து ராஜா, அம்பை வேளாண்மை உதவி இயக்குநர் கற்பகராஜ், குமார் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அம்பை உதவி வட்டார வேளாண்மை அலுவலர் மாசானம், துணை வேளாண்மை அலுவலர் முருகன், அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுஜித், உதவி வேளாண்மை அலுவலர்கள் சாந்தி, விஜயலெட்சுமி, காசிராஜன், சாமிராஜ் மற்றும் அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் தங்க சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.