தொண்டாமுத்தூர், நவ.26: கோவை மருதமலை சுப்ரமணிசுவாமி கோயிலுக்கு ஆண்டுமுழுவதும் பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது. வாழைமரத்து ஐயன் கோயில் துணை ஆணையரான மேனகா கூடுதல் பொறுப்பாக மருதமலை முருகன் கோயிலையும் நிர்வகித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக இக்கோயிலுக்கென நிரந்தர அதிகாரியை இந்து அறநிலையத்துறை நியமிக்கவில்லை. இதன் காரணமாக இக்கோயில் பணிகள் ஸ்தம்பித்துள்ளது.மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான பேருந்து, விடுதி, கருணைஇல்லம், தேவஸ்தான பள்ளி, சித்தமருத்துவமனை மட்டுமின்றி கோயிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களின் வரிவசூல் உள்ளிட்ட பணிகள் தொய்வடைந்துள்ளது.கூடுதல் பொறுப்பு வகிக்கும் அதிகாரி வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே கோயிலுக்கு வருவதாக கூறப்படுகிறது. பணிச்சுமை காரணமாக நிர்வாக ரீதியாக உரிய முடிவுகள் எடுக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் பேரூர் ராஜேந்திரன் கூறுகையில், ‘‘கோயிலுக்கென லட்சக்கணக்கில் வருவாய் இருந்தும், பல்வேறு நலத்திட்ட பணிகள் சரிவர நடப்பதில்லை. நகரும் படிக்கட்டுகள் அமைப்பது, கோயிலில் ரோப் கார் அமைப்பது போன்ற திட்டங்கள் குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இந்து அறநிலையத்துறை மருதமலை கோயிலுக்கு என தனியாக நிரந்தரமாக அதிகாரியை நியமனம் செய்தால் கோயில் நிர்வாகம் சிறப்படைவதோடு, பக்தர்களின் கோரிக்கைளை நிறைவேற்ற ஆவண செய்ய முடியும்,’’ என்றார்.