×

இந்தியாவில் 15 நிமிடத்திற்கு ஒரு பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறது உளவியல் ஆலோசனை மைய இயக்குனர் தகவல்

கன்னியாகுமரி, நவ.26:  நாட்டில் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு பெண் குழந்தை பாலியல் வன்செயலுக்கு உள்ளாகி வருகிறது என்று   கன்னியாகுமரி அமைதி அறக்கட்டளை உளவியல் ஆலோசனை மைய இயக்குநர் டாக்டர் ரத்தன ரூபா ராபின்சன் தெரிவித்தார்.
நவம்பர் 19ம் தேதி, உலகளவில் குழந்தைகள் மீதான வன்செயல் தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, கன்னியாகுமரி அமைதி அறக்கட்டளை உளவியல் ஆலோசனை மையம் சார்பில், குழந்தைகள்  மீதான பாலியல் வன்செயலை தடுப்பது குறித்த ஒரு நாள் பயிலரங்கம்  நடந்தது.  இந்த பயிலரங்கில், தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், பள்ளி,  கல்லூரி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், சமூக சேவகர்கள்  பங்கேற்றனர்.  இவர்களுக்கு, பாலியல் வன்செயலிலில் இருந்து பெண் குழந்தைகளை எவ்வாறு  பாதுகாப்பது, போக்சோ சட்டம் கூறுவது என்ன என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இது குறித்து கன்னியாகுமரி அமைதி அறக்கட்டளை உளவியல் ஆலோசனை மைய  இயக்குநர் டாக்டர் ரத்தன ரூபா ராபின்சன், வேல்டு விஷன் இந்தியா நிர்வாகி  வக்கீல் ஜெயபால் ஆகியோர் கூறியதாவது:  நாட்டில் கடந்த 6 மாதங்களில் பெண்  குழந்தைகள் மீதான பாலியல் வன்செயல் அதிகரித்துள்ளது.கடந்த ஜனவரி-ஜூன் வரையிலான 6 மாதங்களில், தேசிய குற்ற ஆவண புள்ளி விவரப்படி 24,212 வழக்குகள் பதிவாகி உள்ளன.மாதம் ஒன்றுக்கு 4 ஆயிரமும், நாளொன்றுக்கு 130 வழக்குகளும் பதிவாகி வருகின்றன.
15 நிமிடத்துக்கு ஒரு பெண் குழந்தை பாலியல் வன்செயலுக்கு ஆளாகி வருகின்றது.பொது மக்கள் மத்தியில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்செயல் பற்றி  விழிப்புணர்வு ஏற்பட்டு இருந்தாலும், பெரும்பாலானோர் அது குறித்து வெளியே  சொல்ல முன் வருவதில்லை என்றனர்.

Tags : India ,Center for Psychological Counseling ,
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை