×

துவக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு இரவில் துவங்கிய வெளிமாவட்ட மாறுதல் கலந்தாய்வு

நாமக்கல், நவ.22: நாமக்கல்லில் நேற்று துவக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான வெளிமாவட்ட மாறுதல் கலந்தாய்வு பலமணி நேரம் தாமதமாக இரவில் துவங்கியது. ஆனாலும், ஆன்லைனில் மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக காலியாக உள்ள அனைத்து  பணியிடங்களும் காட்டப்பட்டதால் ஆசிரிய,  ஆசிரியைகள் மகிழ்ச்சியடைந்தனர். நாமக்கல்லில் நேற்று, துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் அளிப்பதற்கான ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற்றது. காலை 10 மணிக்கு துவங்க இருந்த கலந்தாய்வு மிகவும் தாமதாக மாலை 6.30 மணிக்கு பிறகே துவங்கியது. இதனால் பல மணி நேரம் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்தாய்வு நடைபெற்ற அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காத்திருந்தனர். கலந்தாய்வை மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார் தலைமை தாங்கி நடத்தினார்.  நேர்முக உதவியாளர் முருகேசன், கண்காணிப்பாளர்  கலையரசன் மற்றும் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் கலந்தாய்வை நடத்தினார்கள்.

கலந்தாய்வு தாமதாக இரவில் தொடங்கினாலும், ஆன்லைனில் மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் காட்டப்பட்டது. இதனால் கலந்தாய்வில்  கலந்து கொண்ட ஆசிரிய, ஆசிரியைகள் மகிழ்ச்சி அடைந்தனர். தாங்கள் விரும்பிய மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை அவர்கள் தேர்வு செய்தனர். பள்ளிபாளையம் ஒன்றியத்தில் ஆண்டாக பணியாற்றி வரும் ஒரு ஆசிரியை, நேற்று திருநெல்வேலி மாவட்டத்துக்கு மாறுதல் பெற்றார். இதேபோல பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடமும், முழுமையாக ஆன்லைனில் காட்டப்பட்டது. நள்ளிரவை தாண்டியும் கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்றது.

Tags : Beginner ,Middle School Teachers ,
× RELATED நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களை...