ராஜபாளையம், நவ.22: ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்ப கல்லூரி மற்றும் சென்னை ஐ.சி.டி அகாடமி இணைந்து “டீம் பில்டிங்” என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான மேம்பாட்டு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் 3 நாள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஐ.சி.டி அகாடமியை சேர்ந்த தொழில்நுட்ப பயிற்சியாளர் நிர்மல் குமார் கலந்துகொண்டு குழு இலக்குகள், குழு உறுப்பினர்களிடையே கருத்துப் பரிமாற்றம் மற்றும் குழு மோதல்களை தவிர்த்தல் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையேயான கருத்துப்பரிமாற்றம், மாணவர்களுக்கான இலக்கு நிர்ணயம் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
முன்னதாக கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் ராஜகருணாகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தை சார்ந்த தொழில்நுட்ப, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த 52 ஆசிரியர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் ஐ.சி.டி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை முனைவர் விஜயலட்சுமி வழிகாட்டுதலின்படி ஜெரோல்ட் ஜான் பிரிட்டோ மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.