ஈரோடு, நவ.22: ஈரோடு பிரப் சாலையை மீனாட்சி சுந்தரனார் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த சாலையின் பெயர் பலகை திறக்கப்பட்டது.
ஈரோட்டில் அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் இருந்து பன்னீர் செல்வம் பார்க் வரை உள்ள பகுதி பிரப் ரோடு என அழைக்கப்பட்டு வந்தது. ஈரோட்டில் புதிய மேம்பால திறப்பு விழாவின் போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு, கடந்த பிப்.27ம் தேதி பிரப் சாலையின் பெயரை மீனாட்சி சுந்தரனார் சாலை என்றும், ஈஸ்வரன் கோயில் பின்புறம் உள்ள தெப்பக்குளம் வீதியை கணிதமேதை ராமானுஜம் வீதி என்றும் மாற்றி அறிவித்தார்.
இந்நிலையில், இதற்கான அரசாணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய மேம்பாலம் அருகே பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மீனாட்சி சுந்தரனார் சாலை பெயர் பலகையின் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தனர். இதேபோல், தெப்பக்குளம் பகுதியில் கணிதமேதை ராமானுஜம் பெயர் பலகையின் திறப்பு விழாவும் நடந்தது.