புதுச்சேரி, நவ. 20: கருவடிக்குப்பம் அருகே முந்திரி தோப்பில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்த லாஸ்பேட்டை போலீசார், ரவுடியின் கூட்டாளிகள் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி முரளி கொலையில் குற்றவாளிகள் அனைவரும் நேற்று முன்தினம் விடுதலையான நிலையில், பழிக்குப் பழியாக கொலை சம்பவங்கள் நடைபெறலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் லாஸ்பேட்டை போலீசார் இறங்கினர். இதற்காக இன்ஸ்பெக்டர் நாகராஜ், எஸ்ஐ கீர்த்தி தலைமையில் அப்பகுதியில் உள்ள வீடுகள் மட்டுமின்றி முந்திரி தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது கருவடிக்குப்பம் அடுத்த இடையன்சாவடி, முந்திரி தோப்பில் ஒரு வாளியில் பதுக்கி வைத்திருந்த ஒரு நாட்டு வெடிகுண்டை போலீசார் அதிரடியாக கைப்பற்றினர். விசாரணையில் நாட்டு வெடிகுண்டை அங்கு பதுக்கி வைத்திருந்தது கருவடிக்குப்பம், பொன்னியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த தர்மசீலன் (21), கருவடிக்குப்பம் அப்பு என்ற பிரதாப் (20) என்பது தெரியவந்த நிலையில் அவர்கள் 2 பேரையும் உடனே போலீசார் கைது செய்தனர். எந்த கொலை, கொள்ளை சதிதிட்டத்திற்காக நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்
திருந்தது என்பது தொடர்பாக இருவரிடமும் தனிப்படை கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியது. இதில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜெகன் தரப்பை தீர்த்துக் கட்ட சரத்குமார் என்ற பொடிமாஸ் உள்ளிட்ட 3 பேர் வெடிகுண்டுடன் சுற்றியபோது பிடிபட்ட நிலையில், அப்போதே இந்த வெடிகுண்டும் தயாரிக்கப்பட்டு அங்கு பதுக்கி வைத்திருந்தது அம்பலமானது. இதையடுத்து ரவுடி பொடி மாஸின் கூட்டாளிகளான இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.