×

கலெக்டர் அலுவலக அறை முன்பாக தென்னிந்திய பார்வர்டு பிளாக் ஆர்ப்பாட்டம்

தேனி, நவ. 20: ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக விசிக கட்சியினர் கோஷமிட்டதை கண்டித்து தேனியில் கலெகடர் அலுவலக அறையை தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கையில் கொடியுடன் திரண்டு சென்று முற்றுகையிட்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட பொதுச் செயலாளர் முருகன் தலைமையில் சுமார் 25க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கையில் கட்சிக் கொடியுடன் தேனி கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் முன்பாக இக்கட்சியினர் ஒரு சமுதாயத்திற்கு எதிராக விசிக கட்சியினர் அவதூறாக கோஷமிட்டதாக கூறி, சம்பந்தப்பட்ட விசிக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனையடுத்து, இக்கட்சியினர் கலெக்டர் அலுவலகத்திற்குள் கட்சிக் கொடிகளுடன் நுழைந்து, கலெக்டர் அலுவலக அறை முன்பாக முற்றுகையிட்டு கோஷமிட்டனர். அப்போது இரு பெண் போலீசார் மட்டும் காவலுக்கு இருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலக அறைக்கு முன்பாக திரண்ட கட்சியினரை அப்புறப்படுத்த முடியாமல் திணறினர். தேனி போலீஸ் டிஎஸ்பி தலைமையில் தேனி போலீசார் விரைந்து கலெக்டர் அலுவலகம் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Tags : demonstration ,South Indian Forward Block ,office room ,Collector ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்