தேனி, நவ. 20: வருசநாடு அருகே உள்ள மலைக்கிராம விவசாயிகள் நேற்று தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம், வருசநாடு அருகே எருமைச்சுனை, வாலாந்தாபுரம், நந்தனாபுரம் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் தங்கி விவசாயம் செய்து பிழைத்து வருகின்றனர். இக்கிராமங்களில் உள்ள விவசாயிகள் இலவம் கன்றுகளை நட்டுள்ளனர். மேலும் கொட்டை முந்திரி செடி பயிர் செய்துள்ளனர். இதில் நேற்றுமுன்தினம் மதியம், வருசநாடு வனத்துறை அதிகாரிகள் சிலர் எருமைச்சுனை, வாலாந்தாபுரம், நந்தனாபுரம் உள்ளிட்ட மலைக்கிராமங்களை சேர்ந்த வேல்முருகன், வீமன், வெள்ளையன், பெரியசாமி, மகாலிங்கம் ஆகியோர் சுமார் 15 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த 2 வருட இலவம் மரக்கன்றுகளை அடியோடு வெட்டி சாய்த்து விட்டனர்.
இதையடுத்து நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வனத்துறை வெட்டிய இலவம் மரக்கன்றுகளை கையில் ஏந்தியபடி தேனி கலெக்டர் அலுவகத்திற்கு கலெக்டரிடம் முறையிட வந்தனர். அங்கே பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் இலவம் மரக்கன்றுகளுடன் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி மறுத்தனர்.இதையடுத்து, விவசாயிகள் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து, விவசாயிகள் தங்களது விவசாய பயிர்களை வெட்டி நாசப்படுத்திய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.