×

குறைந்த தண்ணீர் தேவை என்பதால் மக்காச்சோளம் பயிரிட ஆர்வம் காட்டும் விவசாயிகள்

தொண்டி, நவ.20:  குறைந்த நீரில் பயறுவகை பயிர்கள், மக்காச்சோளம் சாகுபடி செய்து புதிய தொழில் நுட்பங்கள் மூலம் அதிக மகசூல் பெறலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் தெரிவித்ததாவது, மக்காச்சோளம் ஸ்டார்ச், பிரீவர்ஸ், மக்காச்சோளம் மைதா, சிரப், சர்க்கரை, குளுக்கோஸ் போன்ற பல பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது. இதில் கோ 1, கே 1, கங்கா 5, கே.எச் 1, 2, 3. கோ.எச்.எம் 5, எம் 900, எம்.ஹைசெல்சின்ஜென்டா, என்.கே. 6240, பயனீர் 30, லி 62, வி 92 மற்றும் பிக்பாஸ் ஆகியன முக்கிய வீரிய ஒட்டு ரகங்களாகும். ஏக்கருக்கு 6 கிலோ விதை பயன்படுத்தினால் போதும். விதை மூலம் பூசன நோயை தடுக்க 1 கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோ டெர்மா விரிடி என்ற உயிரியல் பூசன கொல்லியை கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின்னர் விதைக்க வேண்டும்.

இத்துடன் உயிரி உரவிதை நேர்த்தி செய்ய வேண்டும். ஏக்கருக்கு 500 கிராம் அசோஸ் பைரில்லம் மற்று பாஸ்போ பாக்டீரியாவை ஆறிய வடிகஞ்சியில் கலந்து பூசன விதை நேர்த்தி செய்த விதையை கலந்து நிழலில் அரை மணி நேரம் உலர்த்தி பின் 60 * 20 செமீ இடைவெளியில் அதாவது பாருக்கு பார் 60 செமீ இடைவெளியில் ஒரு குழிக்கு ஒரு விதை வீதம் 4 செ.மீ ஆழத்தில் விதையை ஊன்ற வேண்டும். ஒரு சதுர மீட்டரில் 8 செடிகளும், ஒரு ஏக்கரில் 32 ஆயிரத்து 240 செடிகள் இருக்குமாறு பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.

சாகுபடிக்கு 119 கிலோ யூரியா, 156 கிலோ சூப்பர் பாஸ்பேட், 34 கிலோ பொட்டாஸ் மற்றும் அடியுரமாக மட்டும் 30 கிலோ யூரியா, 156 கிலோ சூப்பர் பாஸ்பேட், 17 கிலோ பொட்டாஸ் இடவேண்டும். விதைத்த 3 நாட்களுக்கு பின் மண்ணில் போதுமான ஈரம் இருக்கும் போது களைக்கொல்லியான அட்ரசின் 50 சதம் நனையும் தூள் 200 கிராம் அல்லது ஆலோகுளோ 1.6 லிட்டர் என்ற அளவில் 360 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

ஆரம்ப கட்டத்தில் குருத்து புழு தாக்குதல் தென்படும். இதனை கட்டுப்படுத்த செடிக்கு 2 கிராம் வீதம் பியூரட்டான் குருணை மருந்தை மணலில் கலந்து செடியின் குருத்தில் விதைத்த 20வது நாள் இடவேண்டும். தேவைக்கேற்ப 6 முதல் 8 முறை நீர்பாசனம் செய்ய வேண்டும். இவ்வாறு தொழில் நுட்பங்களை கடைபிடித்தால் ஏக்கரில் 2500 முதல் 3000 கிலோ வரை மகசூல் எடுத்து ரூ.45 ஆயிரம் வரை வருமானம் பெறலாம் என தெரிவித்தனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை