×

ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனி கிராமத்தில் தடுப்பு சுவர் இல்லாத குளத்தில் வாகனங்கள் விழும் அபாயம்

ஊத்துக்கோட்டை, நவ. 20: ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனி கிராமத்தில் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள குளத்துக்கு தடுப்பு சுவர் இல்லாததால் வாகனங்கள் விழும் அபாயம் உள்ளது. எனவே அந்த குளத்துக்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என வாகன ஒட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2019 - 2020ம் நிதியாண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்நிலை ஆதாரங்களை சீரமைக்க அரசு திட்டமிட்டது. அதன் அடிப்படையில் ஆரணியாறு வடிநில கோட்டத்தின் மூலம் ஊத்துக்கோட்டை வட்டத்தில் 10 ஏரிகள், கும்மிடிபூண்டி வட்டத்தில் 9 ஏரிகள், பொன்னேரி வட்டத்தில் 11 ஏரிகள் என  30 ஏரிகளை தூர்வாரி, கரையை பலப்படுத்தவும், ஏரி கலங்கல் மற்றும் மதகுகள் சீரமைத்தல், வரத்து கால்வாய் தூர்வாருதல் போன்ற பணிகளுக்கு ஒப்புதல் வழங்கி  10.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.  

இந்நிலையில், சென்னை - திருப்பதில் சாலையில் உள்ள ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனி கிராமத்தில் சிவன் கோயில் எதிரில் உள்ள குளம் தூர்வார அரசு முடிவு செய்தது. அதன்பேரில்,  கடந்த ஆகஸ்ட் மாதம்  ஒரு லட்சம் செலவில்  குடிமராமத்து பணிகள் தொடங்கியது. அந்த பணிகள் கடந்த மாதம் முடிவடைந்தது. ஆனால், குளத்துக்கு பாதுகாப்பு சுவர் அமைக்கப்படவில்லை. இந்த குளத்தையொட்டியுள்ள சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில்  சென்னையில் இருந்து திருப்பதிக்கும், திருப்பதியில் இருந்து சென்னைக்கும் கார், பஸ், வேன் மற்றும் கனரக வாகனங்கள் தினமும் ஏராளம் சென்று வருகிறது. இரவு நேரத்தில் செல்லும் வாகனங்கள் குளத்தில் விழும் அபாயம் உள்ளது. எனவே, சாலையை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள குளத்தின் கரையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : village ,Chulaimani ,Uthukkottai ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...