×

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமையவுள்ள புதிய கலெக்டர் அலுவலகத்தை அமைச்சர் ஆய்வு

செங்கல்பட்டு, நவ. 20: செங்கல்பட்டு மாவட்டத்தில் அமையவுள்ள புதிய கலெக்டர் அலுவலகத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று ஆய்வு செய்தார். செங்கல்பட்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, வரும் 29ம் தேதி தற்காலிக கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், நிரந்தரமான கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் அமையவுள்ள இடத்தினை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, வருவாய்த் துறை கூடுதல் செயலர் அதுல்யமிஸ்ரா, வருவாய் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் உதயகுமார், செய்தியாளர்களிடம் கூறுகையில், வரும் 29ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து, 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முதல்வர், உடனடியாக செயல்படுத்தி 5 புதிய மாவட்டங்களை உருவாக்கியுள்ளார். இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து பணியாளர்களையும் நியமித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் சீன அதிபர் வருகையாலும், அத்திவரதர் வைபவத்தாலும் உலகளவில் புகழ்பெற்றுள்ளது. தற்போது செங்கல்பட்டு மாவட்டமாக மாறுவது ஒரு வரலாற்று நிகழ்வாகும். இதற்கு, அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார். அப்போது, அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், வாலாஜாபாத் கணேசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags : Minister ,Collector ,Office ,Chengalpattu District ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...