நாமக்கல், நவ.20: நாமக்கல் நகரில் வாடகை கட்டிடத்தில் இயங்கிய வந்த பெரும்பாலான அரசு அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டு விட்டதாக பாஸ்கர் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். நாமக்கல்- மோகனூர் சாலையில் பழைய நீதிமன்ற வளாகத்தில் ₹3.45 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வணிக வரித்துறை அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனை நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையொட்டி, அலுவலகத்தில் வணிகர்களுடன் அதிகாரிகள் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார்கள். இக்கூட்டத்தில் நாமக்கல் எம்எல்ஏ பாஸ்கர் கலந்து கொண்டு பேசியதாவது: நாமக்கல் நகரில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த 90 சதவீத அரசு அலுவலகங்களுக்கு கடந்த 8 ஆண்டுகளில் சொந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலான அலுவலகங்கள் அரசு பெருந்திட்ட வளாகத்துக்கு சென்றுள்ளது. அந்த வகையில் வணிக வரித்துறை அலுவலகங்களுக்கு புதிய கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்துள்ளார். வணிகர்களுக்கு பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் அதிமுக அரசு இருந்து வருகிறது. இதை வணிகர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
இவ்வாறு பாஸ்கர் எம்எல்ஏ தெரிவித்தார். அப்போது, திருச்செங்கோட்டில் வணிக வரித்துறை அலுவலகத்துக்கு சொந்த கட்டிடம் கட்ட இடம் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபற்றி அமைச்சர் தங்கமணியிடம் பேசி இரு வார காலத்துக்குள் இடம் தேர்வு செய்யப்படும் என பாஸ்கர் எம்எல்ஏ தெரிவித்தார். நிகழ்ச்சியில், சேலம் வணிக வரி கோட்ட இணை ஆணையர் சுவாமிநாதன், மாவட்ட துணை ஆணையர் உதயகுமார், உதவி ஆணையர்கள் சசிரேகா, ராமதாஸ், நகைக் கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சிவஞானம், நகர கூட்டுறவு வங்கி தலைவர் கண்ணன், ஆண்டவர் அன் கோ கணேசன் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர்.