நாமகிரிப்பேட்டை, நவ.20: தொ.சேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பு மாணவி மண்டல அளவில் நடக்கும் திறனறி கட்டுரைப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். நாமகிரிப்பேட்டை அருகே தொ.சேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவி ஹேமா. இவர், கடந்த வாரம் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறை சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற திறனறி கட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மண்டல அளவில் திருச்சியில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகியுள்ளார் .வெற்றி பெற்ற மாணவியை பள்ளித் தலைமையாசிரியர் ஜோதிகண்மணி, பி.டி.ஏ. துணைத் தலைவர் பழனிவேல், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் மணி, முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள், பி.டி.ஏ. நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். இதே பள்ளியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவிகள் சண்முகப்பிரியா மற்றும் திவ்யா இருவரும் நாமக்கல் கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற திறனறி யோகா போட்டியில் முதலிரண்டு இடங்களை பெற்றுள்ளனர்.