×

சூலூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

சூலூர், நவ. 20:   சூலூரில் புதுப்பிக்கப்பட்டு வரும் சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளை மாவட்ட கலகெ–்டர் நேற்று ஆய்வு செய்தார். சூலூர் பகுதியில் மக்கள் பயன்படுத்தி வெளியேற்றும் சாக்கடைக் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய சுத்திகரிப்பு நிலையம் சந்தைப்பேட்டை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு நாளைக்கு  10 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து அருகிலுள்ள சின்ன குளத்திற்கு நீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையம் போதிய பராபரிப்பின்றி கடந்த 8 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வந்தது. இதை சூலூர் நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளையினர் மீண்டும் புதுப்பித்து நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக நீர் நிலை பாதுகாப்பு அமைப்பு மற்றும் ரோட்டரி சங்கம், அதனுடன் தன்னார்வ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் இணைந்து சுமார் ரூ.60 லட்சம் நிதியை ஒதுக்கினர். தற்போது சோதனை முறையில் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தின் பராமரிப்பு பணிகள் முடிந்து விரைவில் திறக்கப்பட உள்ளது.

 இந்நிலையில் மாவட்ட கலெக்டர் ராசாமணி நேற்று மதியம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் பொதுப்பணித்துறை பொறியாளர்கள், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், சூலூர் வட்டாட்சியர் மீனாகுமாரி, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் சூலூர் நீர்நிலைப் பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகிகள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர். இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு தேவையான மின்சாரத்தை சோலார் மூலம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் சில நிர்வாகப் பணிகளுக்காக பணியாட்கள் மற்றும் கூடுதல் மின்சாரத்தை பேரூராட்சி வழங்க உதவி செய்ய வேண்டும் என அறக்கட்டளை நிர்வாகிகள் கலெக்டரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

Tags : Collector Inspection ,Sulur Waste Water Treatment Plant ,
× RELATED போளூர் ஒன்றியத்தில் ₹1 கோடியில் வளர்ச்சிப் பணிகள் கூடுதல் கலெக்டர் ஆய்வு