திருவண்ணாமலை,
நவ.20: திருவண்ணாமலை மாவட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள்
தீவிரமடைந்துள்ளன. அதையொட்டி, தேர்தல் பணியில் ஈடுபடும் 17,500 அரசு
ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் விபரங்கள் கணினியில் பதிவேற்றும் பணி
நடந்து வருகிறது.தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 3 ஆண்டுகளாக
நடத்தவில்லை. எப்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்பது தொடர்ந்து
கேள்விக்குறியாகவே இருந்தது. இந்நிலையில், அடுத்த மாதம் 13ம் தேதிக்குள்
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என மாநில தேர்தல்
ஆணைத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, உள்ளாட்சித் தேர்தல்
விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில்,
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள்
தீவிரமடைந்துள்ளன. வாக்குச்சாவடி மையங்கள் அமைத்தல், மின்னணு வாக்குப்பதிவு
இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பெட்டிகளை சரிபார்த்து தயார் நிலையில்
வைத்திருத்தல், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு போன்ற பணிகள் முழு வீச்சில்
நடந்து வருகிறது.அதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல்
பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் விபரங்கள் கணனியில்
பதிவேற்றும் பணி, சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடந்து
வருகிறது.