×

திருச்சி ரயில் நிலையத்தில் சுற்றிதிரிந்த ஆதரவற்றவர்கள் தொண்டு நிறுவனத்தில் ஒப்படைப்பு

திருச்சி, நவ.18: திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ஆதரவற்றவர்களை மீட்டு தனியார் தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்தனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் திருச்சி ரயில் நிலைய முன் பகுதி பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று திருச்சி ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ரயில்வே இன்ஸ்பெக்டர் சுஜித்குமார், சப்இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், முரளி உள்ளிட்டவர்கள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரயில் நிலையத்தில் பிச்சை எடுப்பவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள் என 3 பெண், 7 ஆண்கள் தங்கி இருந்தனர். அவர்களை மீட்கப்பட்டு கிராப்பட்டி பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்தனர். ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரை அவருடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஒரு முதியவர் பிச்சை எடுத்து ரூ.16 ஆயிரம் பணம் சேர்த்து வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தனியார் தொண்டு நிறுவன இயக்குனர் ராஜா கூறுகையில், திருச்சி மாநகரத்தில் ஆதரவற்றவர்கள் ஏராளமானவர்கள் சுற்றி திாிந்து வருகின்றனர். இவர்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறோம். மேலும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, ஒத்துழைப்பு கிடைத்தால் 90 நாட்களில் பிச்சைக்காரர்கள், முதியவர்கள், ஆதரவற்றவர்கள் இல்லாத நகரமாக மாற்றி விடுவோம் என்றார்.

Tags : orphans ,railway station ,Trichy ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!