×

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் கீரனூர் பேருந்து நிலையம்


புதுக்கோட்டை, நவ.19: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேருந்து நியைம் நெரிசலில் சிக்கி தவிப்பதால் உடனடியாக பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பயணிகள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்ட 8 பேரூராட்சிகளில் ஒன்றாக கீரனூர் பேரூராட்சியாக உள்ளது. இந்த பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. கீரனூர் புதுக்கோட்டை-திருச்சியின் மையப்பகுதியாகவும் உள்ளது.திருச்சியில் இருந்து புதுக்கோட்டை, சிவகங்கை, காரைக்குடி, முதுகுளத்தூர், பரமக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் கீரனூர் வழியாகத் தான் செல்லும். அதே போல் புதுக்கோட்டையில் இருந்து திருச்சி, திருப்பூர், கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் கீரனூர் பேருந்து நிலையம் வந்து தான் செல்கின்றது. இதேபோல் கீரனூரை சுற்றி 500க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்கள், உரங்களை வாங்க கீரனூர் வந்து செல்கின்றனர். விவசாயிகள் விளைவித்த பொருட்களையும் கீரனூர் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் 10க்கும் மேற்பட்ட நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் கீரனூரில் தாலுகா அலுவலகம், பதிவாளர் அலுவலகம், நீதிமன்றம், கருவூலம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு அலுவலர்களின் குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்தும் இங்கு உள்ளது. இதனால் காலை மாலை நேரங்களில் அதிகமானோர் பேருந்து நிலையம் வந்து செல்கின்றனர். அரசு, தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கீரனூர் பேருந்து நிலையம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பித்து கட்டப்பட்டது. அதில் இருந்து எந்த பராமரிப்பு பணிகளும் நடைபெறவில்லை.் மேலும் பேருந்து நிலையம் அருகே பல வணிக கடைகள் அதிகரித்துவிட்டது. கீரனூர் பேருந்து நிலையத்தின் உட்புறம், பேருந்து நிலையத்தில் இருந்து காந்தி சிலை செல்லும் சாலைகளில் அதிக அளவு தரைக்கடைள் அதிகரித்துவிட்டது. இதனால் அந்த பகுதியில் இருந்த இரு வழிச்சாலை தற்போது ஒரு வழிச்சாலையாகத்தான் உள்ளது.

இதனால் பேருந்துகள் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். குறிப்பாக பேருந்து நிலையத்தின் உட்புறத்தில் பழக்கடைகள், பூக்கடைகள், தள்ளுவண்டியில் காய்கறிக்கடைகள் அதிக அளவில் அதிகரித்துவிட்டது. குறிப்பாக நகர பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் கடைகளை போட்டுள்ளனர். இதனால் பேருந்து நிலையத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலைய கட்டிடமும் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. பல நாட்களாக போதிய பராமரிப்பு இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலையத்தில் வாடகைக்கு இயங்கும் கடைகள் அனைத்தும் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து தான் கடைகளை வைத்து நடத்தி வருகின்றனர். இதனால் பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள் பேருந்து நிற்கும் இடத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவர்கள் காத்திருக்கும்போது அந்த இடத்தில் நிற்கும் பேருந்து வந்துவிட்டால் பயணிகள் வேறு இடத்திற்கு நகர்ந்து செல்லகின்றனர்.

போக்குவரத்து நெரிசல், கடைகளின் ஆக்கிரமிப்புகளை சரிசெய்ய கண்டிப்பாக பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து கீரனூர் பொதுமக்கள் கூறியதாவது:கீரனூர் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் முறையான வழிகள் இல்லை. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. இந்த அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டுமெனில் கண்டிப்பாக பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றார்.

Tags : Keeranur Bus Stand ,
× RELATED வெப்பம் அதிகரிப்பு காரணமாக பொன்னமராவதி முக்கிய சாலைகள் வெறிச்சோடியது