உத்தமபாளையம், நவ.19: சென்னை ஐஐடி மாணவி பாத்திமாவை தற்கொலைக்கு தூண்டிய பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உத்தமபாளையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்டார். அதிக மதிப்பெண் பெறக்கூடிய திறமையான மாணவியாக திகழ்ந்த இவரது தற்கொலையில் மர்மம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மாணவியை தற்கொலைக்கு தூண்டிய பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உத்தமபாளையம் பைபாஸ் திடலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏரியா செயலாளர் முனீஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் லெனின், சிறுபான்மைக்குழு மாவட்ட தலைவர் இப்ராகீம், கம்பம் பகுதி செயலாளர் நாகராஜ் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.