×

சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்

வள்ளியூர், நவ. 19: வள்ளியூர்- தெற்கு வள்ளியூர் சாலையோரம் மண் அரிப்பால் உருவான பள்ளத்தால்  விபத்து அபாயம் நிலவுகிறது. வள்ளியூரில் இருந்து தெற்கு வள்ளியூர் செல்லும் சாலை கடந்த 6 மாதங்களுக்கு முன்னர்  அமைக்கப்பட்டது. இதில் அம்மாச்சி கோயில் அருகே வாறுகால் ஓடையை முறையாக சரிசெய்யவில்லை. மேலும் அதன் அருகே சுமார் 10 அடி ஆழத்திற்கு குழி தோண்டி  சாலை அமைக்கும் பணி நடந்தது. இதனால் சாலையின் அருகே வாறுகால் அமைக்கபடாமல் ராட்சத பள்ளங்கள் கிணறுபோல் உள்ளன. மேலும்  வள்ளியூரில் ரயில்வே சுரங்கபாதை பணி நடைபெறுவதால் அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், கனரக வாகனங்கள் தெற்கு வள்ளியூர் வழியாக அம்மாச்சிகோவில் சாலை வழியாக சென்று வருகின்றன. தற்போது பெய்த மழையால்  மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரத்தில் உருவான ராட்சத பள்ளத்தால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதையடுத்து விபத்து ஏற்படாமல் தடுக்கும்பொருட்டு மண் அரிப்பால் உருவான பள்ளத்தில் சமூகஆர்வலர்கள் தற்காலிகமாக சிகப்பு கொடியை பறக்கவிட்டுள்ளனர். எனவே, இனியாவது இதுவிஷயத்தில் அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி, மிகப்பெரிய அளவில் விபரீதம் நிகழும் முன் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags :
× RELATED தென்காசியில் ராம் நல்லமணி யாதவா கல்லூரி பட்டமளிப்பு விழா