×

உரம் அதிகம் இடுவதால் நெற்பயிர்கள் பாதிக்கப்படும் வேளாண்துறை எச்சரிக்கை

சிவகங்கை, நவ.19: நெற்பயிர்களில் தேவைக்கு அதிகமாக உரமிடுவதால் பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் எக்டேர் நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த பருவமழையால் மாவட்டத்தின் பல பகுதிகளில் வரத்து கால்வாய்கள் நல்ல நிலையில் உள்ள சுமார் 50 சதவீத கண்மாய்களில் ஓரளவு நீர் நிறைந்து உள்ளது. மழை பெய்ததையடுத்து மாவட்டம் முழுவதும் உழுவது மற்றும் விதைப்பு பணி, நாற்றங்கால் அமைக்கும் பணி உள்ளிட்ட விவசாயப்பணிகள் தீவிரமாக நடந்தது. இதுவரை மாவட்டம் முழுவதும் சுமார் 55 ஆயிரம் எக்டேரில் நெல் விதைப்பு மற்றும் நடவு உள்ளிட்ட சாகுபடி பணிகள் நடந்துள்ளன. வெயில் இல்லாமல் தொடர்ந்து லேசான சாரல் மழை பெய்வதால் நிலத்தில் ஈரப்பதம் காணப்படுகிறது. இதனால் பயிர்கள் தற்போது நல்ல நிலையில் உள்ளது. இந்நிலையில் அதிகப்படியாக உரமிடுவதால் பயிர்கள் பாதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட வேளாண் துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது: நெற்பயிர்களுக்கு டிஏபி, யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஏக்கர் அளவில் நெல் பயிரிடப்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்டதிலிருந்து 25வது நாள், 45வது நாள், 65வது நாள் தலா 22 கி.கி உரமிட்டால் போதுமானது. ஆனால் ஒரு ஏக்கர் நிலத்தில் 25, 45, 65 வது நாட்களில் தலா 50 கி.கி எடையுள்ள ஒரு மூட்டை யூரியா உரத்தை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அதிகப்படியாக உரமிடப்பட்ட சில நாட்களில் பயிர்கள் பார்ப்பதற்கு அதிக பச்சை நிறத்துடன் காணப்படும். பயிர்கள் நன்கு வளர்ந்த நிலையில் காணப்பட்டாலும் விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்படும். அதிக உரமிட்டால் பயிர்கள் நன்கு வளரும் என நினைத்து விவசாயிகள் இவ்வாறு செய்வது தவறு. சரியான அளவில் மட்டுமே உரத்தை பயன்படுத்த வேண்டும். வேளாண் அலுவலர்களிடம் இது குறித்து ஆலோசனை கேட்கலாம். பயிர்களுக்கு உரங்கள், பூச்சி மருந்து பயன்படுத்துவது குறித்து தகுந்த ஆலோசனைகளை பெற்று அதன்படி நடப்பது மிகவும் முக்கியமானதாகும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : paddy fields ,
× RELATED நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை