ஈரோடு, நவ. 19: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் முகாமிற்கு முள்எலியுடன் வந்த சமூக சேவகர் கலெக்டரிடம் ஒப்படைத்து அதை வனத்தில் விட கோரிக்கை விடுத்தார். ஈரோடு மாவட்டம் கொடுமுடி அண்ணா நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி. சமூக சேவகர். இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு முள்எலியை பிளாஸ்டிக் கூடையில் போட்டு எடுத்து வந்தார். அப்போது கலெக்டர் கதிரவன் குறைதீர்க்கும் முகாமில் இருந்து கிளம்பியபோது அவரிடம் முள்எலியை காட்டினார்.
இந்த முள்எலி நேற்று முன்தினம் இரவு வீட்டிற்குள் வந்ததாகவும், அதை பிடித்து வந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதை வனத்துறை மூலமாக காட்டில் விட கோரிக்கை விடுத்தார். இது குறித்து சமூக சேவகர் பழனிச்சாமி கூறியதாவது: நேற்று இரவு (நேற்று முன்தினம்) 10.30 மணியளவில் லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது இந்த முள்எலி வீட்டிற்குள் வந்தது. இதை எடுத்து கூடையில் வைத்தேன். அரியவகை முள்எலி என்பதால் அதை வனத்திற்குள் விட வேண்டும் என்பதற்காக கலெக்டரிடம் ஒப்படைக்க கொண்டு வந்தேன் என கூறினார். வனத்துறையினரை அழைத்த கலெக்டர் கதிரவன் முள்எலியை அவர்களிடம் ஒப்படைத்து காட்டில் விட உத்தரவிட்டார்.