ஈரோடு, நவ. 19: மின் உற்பத்திக்காக கதவணை மின் நிலையத்தில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால் காவிரி தண்ணீர் பாசி படர்ந்து காணப்படுகின்றது. ஈரோடு அடுத்துள்ள பெரிய அக்ரஹாரம் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நீர் மின் கதவணை திட்டத்தில் 20 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது காவிரி ஆற்றில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கடந்த சில மாதங்களாக மின் உற்பத்தி நடந்து வருகிறது. இதற்காக தண்ணீர் அதிக அளவில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரையோரங்களில் ஆகாயத்தாமரைகள் படர்ந்துள்ளதால் தண்ணீரின் ஓட்டம் தடைபட்டுள்ளதோடு தண்ணீரில் பாசி படர்ந்து பச்சைக்கலரில் தண்ணீர் இருப்பதோடு துர்நாற்றமும் வீசி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே தேக்கி வைக்கப்பட்டுள்ள பாசி படர்ந்த தண்ணீரை வெளியேற்றுவதோடு தண்ணீர் ஓட்டத்தை தடுக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற தமிழ்நாடு மின் உற்பத்தி பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.