காஞ்சிபுரம், நவ.19: கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மின்னல் தாக்கி உயிரிழந்த 6 பேரது குடும்பங்களுக்கு ₹24 லட்சத்துக்கான நிதியுதவியை கலெக்டர்வழங்கினார்.
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து முதியோர், விதவை, மாற்றுத் திறனாளி உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, பசுமை விடுகள், திருமண உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 340 மனுக்களை பெற்றார். பின்னர், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி, நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.தொடர்ந்து, 2019ம் ஆண்டு கொடி நாள் நிதி வசூலாக திருப்போரூர் வட்டாட்சியர் ₹3.78 லட்சம், பெரும்புதூர் மாவட்ட கல்வி அலுவலர் ₹2 லட்சம், காஞ்சிபுரம் வட்டாட்சியர் ₹1.55 லட்சம், திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர்₹1.01 லட்சம், செங்கல்பட்டு நகராட்சி ஆணையாளர் ₹1.14 லட்சம், மதுராந்தகம் வட்டாட்சியர் ₹1 லட்சம், உதவி ஆணையர் (கலால்) ₹1 லட்சம் என மொத்தம் ₹11 லட்சத்து 48 ஆயிரத்துக்கான காசோலைகளை கலெக்டரிடம் வழங்கினர்.
பின்னர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து சுவர் இடிந்து விழுத்து உயிரிந்தவரின் குடும்பத்துக்கு ₹1 லட்சம், மின்சாரம் தாக்கி இறந்தவர் குடும்பத்துக்கு ₹3 லட்சம், வருவாய்த் துறை சார்பில் 8 முதியோர் உதவித்தொகை ஆணை, ஒரு மாற்றுத் திறனாளி உதவிக்தொகை ஆணை, 2 விதவை உதவித்தொகை ஆணை, கண் பார்வையற்ற தேவதாஸ் என்பவருக்கு ₹5,500 மதிப்பில் நவீன மடக்கு ஊன்றுகோல் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) மாலதி, உதவி ஆணையர் (கலால்) ஜீவா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தனலட்சுமி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) நாராயணன், (கணக்கு) சீனிவாசன், (தேர்தல்) அமீத்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.