×

மின்பாதையில் பழுது ஏற்பட்டால் இணைப்பை துண்டிக்காமல் சீரமைப்பது குறித்து பயிற்சி

* பழுதை கண்டறிய ‘ட்ரோன்’
* அமைச்சர் தங்கமணி தகவல்

புழல்: புழல் அடுத்த அலமாதி அருகே வாணியன்சத்திரத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் மின் ஊழியர்கள் மின்பாதையில் பழுது ஏற்படும் காலங்களில் மேற்கொள்ளும் பராமரிப்பு பணிகளை தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா. பாண்டியராஜன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது: மின் பழுது ஏற்பட்டால் மின் இணைப்பை துண்டிக்காமல் நேரடியாக பணி செய்யும் நடவடிக்கையாக இந்த டெமோ மேற்கொள்ளப்பட்டது. 400 கிலோவாட் மின்சாரம் பாயும் மின்பாதையில் இணைப்பை துண்டிக்காமல் நேரடியாக பழுது நீக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பணியால் 4 மணி நேர மின் தடை ஏற்பட வேண்டிய சூழலில் மின் தடை அரை மணி நேரமாக குறைக்கப்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதன்முறையாக இந்த பணிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.  பெங்களூருவில் இருந்து 160 பேர் பயிற்சி பெற்று இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மின் தடங்களில்  பழுது கண்டறிய ட்ரோன்  மூலம் 3 கி.மீ. பறந்து பழுது பார்க்கப்படும்.  2024ம் ஆண்டிற்குள் புதிய மின்திட்டங்கள் மூலம் தமிழகத்தில் கூடுதலாக 6000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு நாளொன்று ரூ.1000 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.  5000 கேங்க்மேன் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. பதிவு செய்த ஒப்பந்த ஊழியர்களுக்கு வரும் 25ம் தேதி முதல் தேர்வு நடைபெற உள்ளது. தொழிற்சங்கங்களின் தவறான  வழிகாட்டுதல்களாலேயே ஒப்பந்த தொழிலாளர்கள் பணி அமர்த்துவதில் தாமதம் ஏற்படுகிறது. உயர்மின் கோபுரம் அமைப்பதால் விவசாயம் செய்ய முடியாது என்பது தவறான கருத்து. கோபுரத்தின் கீழே விவசாயம் தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், சீனாவில் கூட புதைவட கேபிள் இல்லை, உயரழுத்த மின்சாரம் கோபுரங்கள் வழியே தான் கொண்டு செல்லப்படுகிறது. தென்னைக்கு ரூ.36,200 என பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு உயர்த்தி வழங்கப்படும். பூமிக்கடியில் மின்கம்பிகள் புதைக்கும் திட்டம் முதற்கட்டமாக மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. படிப்படியாக அனைத்து பகுதிகளிலும் பூமிக்கடியில்  மின்கேபிள் புதைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...