பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், தென்றல் நகர், திருவிக சாலை 1வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் கஜேந்திரன் (50). இவர், சென்னை விமான நிலைய தீயணைப்பு துறையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (46), கடந்த இரு தினங்களுக்கு முன், மதுரையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். கஜேந்திரன், நேற்று முன்தினம் மதியம் ஒரு மணிக்கு வீட்டை பூட்டி விட்டு, வழக்கம்போல் பணிக்கு சென்றார். நேற்று காலை பணி முடிந்ததும் இவர் வீடு திரும்பியபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவுகள் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 35 சவரன் தங்க நகைகள் மற்றும் 2.5 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதுகுறித்து கஜேந்திரன் சங்கர்நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன், பம்மல் பைனான்ஸ் அதிபர் இம்மானுவேல் ஜெயசீலன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 117 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹30 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற நிலையில், தற்போது விமான நிலைய அதிகாரியின் வீட்டு பூட்டை உடைத்து 35 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.