விழுப்புரம், நவ. 14: விழுப்புரத்தில் நடந்த மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் 300 பேர் பங்கேற்றனர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கியது. கீழ்பெரும்பாக்கம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் துவங்கிய இப்போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சின்னப்பன் துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன் தலைமை தாங்கினார். முதல்நாளில் தடகளத்தில் ஆண்கள் பிரிவில் 100, 400, 1500 மீட்டர் ஓட்டம் மற்றும் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டிகள் நடந்தது.இதேபோல் பெண்களுக்கு 100, 400, 1500 மீட்டர் உயரம், நீளம் தாண்டுதல், குண்டு, வட்டு எறியும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று இரண்டாம் நாளாக நீச்சல் போட்டி நடந்தது. விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்திலுள்ள நீச்சல் குளத்தில் இப்போட்டி நடந்தது. குரூப் 1 பிரிவில் 100 மீட்டரும், குரூப் 2 பிரிவு 50 மீட்டரும், குரூப் 3 பிரிவு 50 மீட்டர், குரூப் 4 பிரிவு 25 மீட்டர், குரூப் 5 பிரிவு 25 மீட்டரில் பிரிஸ்டைல், பேக் ஸ்டோக், பிரஸ்ட் ஸ்டோக், பட்டர் பிளை போட்டிகள் நடந்தது. இதில் 300 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.