×

நாடக கலைஞர்களுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க நடவடிக்கை

புதுச்ேசரி, நவ. 14: நாடக கலைஞர்களுக்கு உதவித்தொகை உயர்த்தித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கரதாஸ் சுவாமிகள் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் சபாநாயகர் சிவக்கொழுந்து கூறினார். நாடகத்தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் 97வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் இணைந்து கருவடிக்குப்பத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சபாநாயகர் சிவக்கொழுந்து, முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா. கலைநாதன், கலை பண்பாட்டுத்துறை செயலர் தேவேஷ் சிங், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம், நிர்வாகிகள் சேதுசெல்வம், துரைசெல்வம், கலை இலக்கிய பெருமன்ற தலைவர் எல்லை சிவக்குமார், நடிகர் சங்கம் சார்பில் நடிகர்கள் விக்னேஷ், ஐசரிகணேஷ், உதயா, கணேஷ், நடிகைகள் குட்டி பத்மினி, ஆர்த்தி மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள், நாடக நடிகர், நடிகைகள் மற்றும் பலர் சங்கரதாஸ் சுவாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, மயான வளாகத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் சபாநாயகர் சிவக்கொழுந்து பேசியதாவது: நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத்திற்காகவே வாழ்ந்து மறைந்தவர். பாரதியார், அரவிந்தர் உலவிய மண்ணில் சங்கரதாஸ் சுவாமிகள் சமாதி இருப்பது நமக்கு பெருமை. இது மயானம் போல் அல்லாமல் பூங்கா போல் அமைக்கப்பட்டுள்ளது. அருகில் பாரதி பாடிய குயில்தோப்பு, சித்தானந்தா சுவாமிகள் ஆலயம் இருப்பது சிறப்பு. இந்தியா அடிமைப்பட்டு கிடந்தபோது மக்களிடையே சுதந்திர வேட்கையை உருவாக்க காரணமாக இருந்தது நாடகம். நாடக கலைஞர்களுக்கு உதவும் வகையில் நேரு சிலை அருகில் ஒரு அரங்கம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது நாடக கலைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை போதுமானதல்ல, அதனை உயர்த்தித்தர முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளேன். கலைஞர்களுக்கு புதுச்சேரி அரசு என்றும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

நடிகரும், சினிமா படத்தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் பேசும்போது, எனது தந்தை ஐசரி வேலன் நாடகத்தில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர். அதனால் சிறுவயது முதலே நாடகத்தின் சிரமங்களை அறிந்தவன் நான். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் 2 அணிகளாக போட்டியிட்டனர். அதில் ஒன்று தான் எங்களுடைய சங்கரதாஸ் அணி. தேர்தல் முடிவு விரைவில் வரும். முடிவு எதுவாக இருந்தாலும், நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க வேண்டும். விரைவில் நாங்கள் அதனை கட்டி முடிப்போம். இங்குள்ள சங்கரதாஸ் நினைவிடத்தை புதுப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அடுத்த ஆண்டு நினைவுநாள் வருவதற்குள் இந்த நினைவிடம் புதுப்பிக்கப்பட்டு இருக்கும் என்றார்.
முன்னதாக, காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோயில் அருகிலிருந்து கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் ஊர்வலம் புறப்பட்டு நினைவிடத்துக்கு வந்து சேர்ந்தது. நாடகக்கலை சங்க தலைவர் புதுவை தாசன் தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில் நாடகக்குழுக்கள், நாடக கலைஞர்கள், தெருக்கூத்து கலைஞர்கள், திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தினர் பங்கேற்றனர். தெருக்கூத்து கலைஞர்கள் பல்வேறு வேடமணிந்து நடனம் ஆடியபடி வந்தனர். புலியாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


Tags : drama artists ,
× RELATED அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும்...