புதுச்சேரி, நவ. 14: வில்லியனூர் அருகே போலீசை தாக்கிய ரவுடி அய்யனார் ஒரு மாதத்திற்கும் மேலாக தலைமறைவாக உள்ள நிலையில், இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு புதுச்சேரி நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
புதுவை, வில்லியனூர் கரிக்கலாம்பாக்கத்தில் கடந்த மாதம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை ரவுடி கும்பல் தாக்கியது. இதில் 2 போலீசார் காயமடைந்த நிலையில் மங்கலம் எஸ்ஐ சரண்யா தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து 5 பேரை தேடினர். இதில் ஆலங்குப்பத்தில் பதுங்கியிருந்த ஜோசப் உள்ளிட்ட 2 பேர் உடனே கைது செய்யப்பட்டனர். இருப்பினும் முக்கிய குற்றவாளியான அய்யனார் மற்றும் அருணாசலம் இருவரும் தலைமறைவான நிலையில், ஓரிரு நாளில் அருணாசலம் பிடிபட்டார். ஆனால் சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் அய்யனார் போலீசில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்த நிலையில் அவரை உடனடியாக கைது செய்ய மேற்கு எஸ்பி ரங்கநாதன் உத்தரவிட்டார்.
தனிப்படையினர் அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டும் இதுவரை துப்பு கிடைக்காமல் திணறி வருகின்றனர். இதனிடையே இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு அய்யனார் தரப்பில் புதுச்சேரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தற்போது மனு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு காவல்துறை தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்க உள்ளதால் அய்யனாரின் முன்ஜாமீன் நீதிமன்றத்தில் ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா? என்பது இன்று தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.